Friday 27 January 2012

ஆனந்த பைத்தியம்

அன்னையிடம் மட்டும் 
அனைத்தையும் உரைத்தவள்
உன்னிடம் பேசி 
அன்னையை மறந்ததென்ன?

உறங்க மறந்து
உண்ண மறுத்து
உரக்க சிரித்து
உள்ளம் தொலைத்தேன்

உன் பேரை கேட்டாலே
உதடு சிரித்தது
ஏன் எனக் கேட்டால்?
அசடு வழிந்தது

இரு பன்னிரெண்டு வருடங்கள்
எதையுமே உணராமல்
ஓரிரு நாட்களில் 
எனக்குள் நிகழ்ந்ததென்ன??

இதயம் சிரித்தது
உண்மையை உரைத்தது
ஆனந்த பைத்தியம்
உனக்கென்று சொன்னது!!

Wednesday 11 January 2012

கிறுக்குச்சிறுக்கி


ஆத்தோரம் தோப்புக்குள்ள
ஆளில்லா நேரத்தில
என்னை என்ன செய்வாயோ
எண்ணி எண்ணி சிலிர்த்துக்கிட்டேன்
எனக்குள்ள சிரிச்சுகிட்டேன்

கிறுக்குத் தான் பிடிச்சிருச்சோ?
ஆத்தா என்ன வையக்கேட்டேன்
அய்யனத்தான் கண்டுப்புட்டா
அடுக்களைக்குள் ஒளிஞ்சுக்கிட்டேன்

கறிசோறு சமைச்சிடத்தான்
கருத்தோட கத்துக்கிட்டேன்- உன்
தோளோடு சாஞ்சிடத்தான்
என்ன தவம் செஞ்சுப்புட்டேன்

உள்ளூரில் நீயிருந்தும்
ஒருமுறை வந்து பார்க்கலயே
கல்யாணத் தேதிக் குறிச்சதாரோ? - அதை
காலந் தள்ளி வச்சதாரோ?

மலைக்கோயில் தேடிப்போனேன்
மனசார வேண்டப்போனேன்
சாமி முகம் மறைஞ்சதய்யா - உன்
ஆசை முகம் தெரிஞ்சதய்யா!!

தூரத்தில் உன்ன பார்த்தாலே
தூரல் விழும் நெஞ்சுக்குள்ள
பக்கத்தில வருவாயோ
ஏங்குது இந்த சின்னப்புள்ள!!

Sunday 8 January 2012

அய்யோ!!

அழுதழுது நான் சாகத்தானா?
அக்னி சாட்சியாய் என் கைப்பிடித்தாய்
நொந்து நொந்து உடல் வேகத்தானா?
நொடிப்பொழுதும் விலகாமல் என்னுள் இருந்தாய்


பத்துப் பொருத்தம் பார்த்து 
மணமேடை ஏறியவன்
அதில் ஒன்று கூட நிலைக்காமல்
மண்ணுக்குள் மறைந்ததென்ன?


ஆரஞ்சு பட்டு வேண்டாம் என்று
அரக்கு பட்டுப்புடவை எடுத்தாய் - இப்படி
வெள்ளை உடை உடுத்தத்தானா
விதவிதமாய் என்னை அலங்கரித்தாய்


மெட்டி ஒலி சத்தம் கேட்டே
மெல்ல நெருங்கி வந்தவனே - இன்று
என் அழுகுரலும் கேட்கலயோ?
ஆறுதல் சொல்ல நீயில்லயோ?


மல்லிகைப்பூ வாங்கி வைத்தேன்
மாலையில் நீயும் மயங்கிடத்தான் - இன்று
பூவோடு பொட்டும் போனதடா
புன்னகை முகமும் தீர்ந்ததடா


இப்படி நட்டாத்தில் விடத்தானா
நங்கை என்னை காதலித்தாய்
விதியை எண்ணி அழத்தானா
வீம்பாய் என் கைபிடித்தாய்


மங்கள நேரம் பார்த்துத்தானே
மாங்கல்யம் கயிறுதனைக் கட்டினாய்
அதை உன்னோடு அறுத்துச்செல்ல
எப்போதடா எமனிடம் நேரம் கேட்டாய்?


வாழ்ந்த வாழ்வும் சலிச்சிட்டுதோ
தெற்கு வாசல் தேடிப்போனாய்
திரும்பி எழா நித்திரை ஒன்றை
என்னை விட்டு தனித்து போனாய்


அட சண்டாள கடவுளே!!
அவன் இறக்க நேரம் குறித்தவன்
அவனை மறக்க நேரம் குறிக்க மறந்தாயோ?


உன்னோடு செத்திடவே
உடன்கட்டை ஏறிடுவேன் - ஆனால்
கண்ணெதிரில் சிரிக்குதடா
நம் காதலுக்கு சாட்சியொன்று

Tuesday 3 January 2012

என் நண்பன்!!

பெண்ணொடு நட்புற்றால்
பெருநஷ்டம் வருமென்று
பெரும்பாலோர் ஒதுங்கி நிற்க
வெறும் நட்போடு வந்தவனே!!

காசில்லா நேரத்திலே
கல்வி எதற்கு பெண்ணுக்கென்று
வீட்டில் எல்லாரும் சொன்னாலும்
பகுத்தறிவு அவர்கூட்டி
காந்தி படம் போட்ட காகிதத்தால்
வாழ்நாள் வெளிச்சம் தந்த பகலவனே!!

காதல் உண்டோ இருவருக்கும்? - என்று
நம் பெற்றொரே கேட்ட பின்பும்
கண்ணியமாய் நட்பைச் சொல்லி
அவர் கருத்துதனை மாற்றிட்டாய்!!

சகோதரனோ நீயென்று
நண்பர் கூட்டம் கேட்டபோதும்
இல்லையென்று மறுத்திட்டாய்
அதற்கும் மேல் நட்பென்று உணர்த்திட்டாய்!!

கன்னியின் என் காதலினை
கண்ணாளன் அறியுமுன்னே - என்
கள்ளச்சிரிப்பில் கண்டுகொண்டாய் - என்வாயால்
காதலையும் சொல்லவைத்தாய்!!

அவனை பற்றி தெரிந்து கொள்ள -அவன்
நண்பன் பற்றி கேட்கச்சொன்னாய்
உன் நண்பனாக அவன் இருந்ததினால்
என் காதலனாய் ஆகிவிட்டான்!!

உன்னை போலொரு காதலியை
எப்படியடா தேர்ந்தெடுத்தாய்?
உன் காதலுக்கு சம்மத்தத்தை
என்னிடம் வந்து சொல்லுகின்றாள்!!

கேனச்சிறுக்கி நானென்று
கெட்ட வார்த்தை சொன்னதுண்டு
அதில் பெண்ணடிமை தெரியவில்லை
உன் பேரன்பு தெரிந்ததடா!!

தொலைபேசியில் மணிக்கணக்காய்
பேசினால்தான் நட்பென்றால்
கர்ணன் எதைக்கொண்டு வளர்த்திட்டான்?
நட்பென்னும் நன்றிக்கடனை!!

தோளோடு தோள் உரசி
நின்றால் தான் நட்பாமோ?
அழுதபோது உன் கைக்குட்டை
தண்டனையின்போது உன் செருப்பு
பாராட்டும் போது கைக்குலுக்கல்
இது தவிர வேறு தெரியாது
நம் நட்புக்கு!!

அடுத்துவரும் ஜென்மத்தில்
ஒரு கருவறையில் இரட்டையாய் நாம் பிறப்போமா?
அங்கிருந்தே நட்பாவோம்
நட்பு தீயில் மகர தீபம் ஏற்றிவைப்போம்!!